×

4வது வார்டில் ரூ.67 லட்சத்தில் தார் சாலை, தெருவிளக்கு பணி தொடக்கம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம், 4வது வார்டு சண்முகபுரத்திலிருந்து விம்கோ நகர் ரயில் நிலையம் வரை செல்லும் சாலையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். இந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டனர். இதையடுத்து, இந்த சாலையில் ரூ.4லட்சம் செலவில் 26 தெரு விளக்கு அமைக்கவும், இங்குள்ள பழுதடைந்திருந்த சண்முகபுரம் முதல் பூம்புகார் நகர், அம்பேத்கர் நகர், சரஸ்வதி நகர், டி.எஸ்.கோபால் நகர் போன்ற சாலையில் மாநகராட்சி சார்பில் ரூ.43 லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் ஆதிதிராவிட காலனியில் அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் மாமன்ற உறுப்பினர் நிதி ரூ.20 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் மற்றும் வளைவு அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்த பணிகளுக்கான தொடக்க விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஜெயராமன் தலைமையில் நடந்தது. மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார். உதவிபொறியாளர் அன்னலஷ்மி, மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பாக்கியம், கதிர்வேல் வெங்கட்டையா உள்பட பலர் பங்கேற்றனர்.

The post 4வது வார்டில் ரூ.67 லட்சத்தில் தார் சாலை, தெருவிளக்கு பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : 4th Ward ,Tiruvottiyur ,Thiruvottiyur Mandal ,4th Ward Sanmugapuram ,Vimco Nagar Railway Station ,
× RELATED குரு பெயர்ச்சியை முன்னிட்டு...